'மாமன்னன்' தான் கடைசி படம்.. இனி 100% அரசியலில் கவனம்.. உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி !
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அரசியல் மட்டுமல்லாது சினிமா துறையிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
சினிமா தயாரிப்பாளர் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர் ஆக இருந்த உதயநிதி, ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெயரில் குருவி, ஆதவன், மன்மதன் அம்பு போன்ற படங்களை தந்துள்ளது.
மேலும், முழு காமெடி திரைப்படமான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன், இப்படை வெல்லும், நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த அனைத்து படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. நெஞ்சுக்கு நீதி, கண்ணை நம்பாதே, மாமன்னன் போன்றவற்றில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, மனைவி கிருத்திகா டைரக்ஷனில் ஒரு படம் நடிக்க உதயநிதி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு பின் முழுநேர அரசியல்வாதியாக இறங்கும் திட்டம் இருப்பதாக தெரிகிறது. அதனால் வேறு எந்த படங்களையும் ஒப்புக் கொள்ளவில்லை என அவரது நெருங்கிய வட்டாரங்கள் சார்பில் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், உதயநிதி பிரபல சேனலுக்கு அளித்த பேட்டியில் உதயநிதி ஸ்டாலின், ‘மாமன்னன் திரைப்படம்தான் அனேகமாக எனது கடைசி படமாக இருக்கலாம்.
சினிமாவை விட அரசியலில் அதிக ஆர்வம் இருப்பதால், அதிலும் அரசியலில் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் இருக்கிறது.100% அரசியலில் கவனம் செலுத்துவதற்காகவும், அரசியலை இன்னும் அதிகம் கற்று கொள்ளவும் திட்டமிட்டுள்ளேன்’ என அவர் கூறியுள்ளார் .
மேலும் உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசனுடன் அரசியல் ரீதியான எதிர்ப்பு, சினிமா ரீதியில் அவருடனான உறவு உள்பட பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.