'சிவகார்த்திகேயன் யாருனே தெரியாது' என அப்போ சொன்ன மிஷ்கின்.. ஆனா இப்போ.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
இயக்குனர் வின்சண்ட் செல்வாவிடம் யூத், ஜித்தன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய மிஷ்கின், சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் இயக்குனராக அறிமுகமானார். இயக்குனர் மிஸ்கின் அவர்கள் திகில் திரைப்படங்களும், ஆழமான வலிகளையும் திரைக்கதையையும் எடுத்துரைக்கும் அளவிற்கு திரைப்படம் உருவாக்குவது அவரது வழக்கம்.
இவர் இயக்கிய ‘அஞ்சாதே’ திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. பின்னர் நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது இவரது இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நாயகியாக, விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். மிஷ்கின் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் சில படங்களில் கலக்கி உள்ளார். நந்தலாலா படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த மிஷ்கின், சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ், பேச்சிலர் போன்ற பல படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார்.
இந்நிலையில், தற்போது அவர் வில்லனாகவும் அவதாரம் எடுத்துள்ளார். அதன்படி மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இதன் அறிவிப்பு வெளியானது முதல், தற்போது நெட்டிசன்கள் இவரை ட்ரோல் செய்ய தொடங்கியுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மிஷ்கின், அப்போது டிடி சில நடிகர்களின் பெயரை சொல்ல சொல்ல அவர்களைப் பற்றி ஒரு வரியில் பதிலளித்து வந்தார் மிஷ்கின்.
சூப்பர்ஸ்டார் - முள்ளும் மலரும், அஜித் - பெரிய மனதுக்காரர் என சொன்ன மிஷ்கின், சிவகார்த்திகேயன் பற்றி கேட்டதும் சற்றும் யோசிக்காமல் தெரியாது என கூறி இருந்தார். அவரின் அந்த பேட்டியை தற்போது வைரலாக்கி வரும் நெட்டிசன்கள், மிஷ்கினை திட்டித்தீர்த்து வருகின்றனர்.