'பொன்னி நதி' பாடல்.. தமிழ் உச்சரிப்பில் பிழை.. A.R. ரகுமானை வறுத்தெடுக்கும் ரசிகர்கள் !
புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக கொண்டு, “இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்கும் திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”.
மிகுந்த எதிர்பார்ப்புடன் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐதராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது.
இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் - பாகம் 1” வருகிற செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இப்படத்தின் எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்குனராக தோட்டா தரணி, ரவி வர்மன் ISC ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பல பழங்கால இசைக்கருவிகளை இசையின் முழுமைக்காக பயன்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
படத்தின் முக்கியப் பகுதி சோழப் பேரரசின் தலைநகரான தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. 2ம் பாகம் 2023 கோடையில் பெரிய திரைகளில் வரக்கூடும் என கூறப்படுகிறது.
முக்கிய கதாபாத்திரங்களின் பெயருடன் புகைப்படத்தை வெளியிட்டனர். இதில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய் பச்சன், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா ஆகியோரின் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இப்படத்தின் பிரம்மிக்க வைக்கும் டீசர், விக்ரமின் மேக்கிங் வீடியோ என அடுத்தடுத்து அறிவிப்பு வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் கூட்டி வருகிறது.
இப்படத்தின் முதல் பாடலான ‘பொன்னி நதி’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. அதில் வந்தியதேவனாக நடித்த கார்த்தி பாடல் முழுவதும் தோன்றுகிறார். இந்த பாடலை ஏ.ஆர் ரகுமான் பாடியிருக்கிறார். ஆனால் இப்பாடல் பெரிதாக யாரையும் கவரவில்லை என்றே தெரிகிறது.
பாகுபலி படத்தில் மகிழ்மதியை அறிமுகப்படுத்தும் பாடலை கேட்டாலே, மகிழ்மதி நகரத்தின் பிரம்மாண்டத்தை உணர முடியும். ஆனால், சோழ தேசத்தின் பெருமைகளை உணர்த்தும் இந்த பாடலில் ஏ ஆர் ரகுமான் குரலில் ஜீவன் இல்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்கள் ஆடிப்பெருக்கு தினத்தில் வந்தியதேவன் வரும் காட்சிகளை விவரிக்கும்படி இந்த பொன்னி நதி பாடல் இல்லை என்றும், சோழர்களின் அடையாளமான நெற்றியில் திருநீர் இல்லை என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஏற்கனவே, பெயர்கள் மாற்றம், நாமம் போட்டிருப்பது என பல சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல விமர்சனங்களில் சிக்கி வருகிறது பொன்னியின் செல்வன்.