Viral Video: 'சாகறது தான் எனக்கு ஒரே வழி.. சாப்பிட கூட வழியில்ல' கண்ணீர் விட்டு கதறிய மீரா மிதுன்..
மாடலிங் அழகியாக வலம் வந்த மீரா மிதுன், 2016ம் ஆண்டு மிஸ் தென்னிந்திய அழகி பட்டம் வென்றவர். இதற்கு முன்னர், 2015ம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் பட்டத்திற்காக போட்டியிட்ட போது ரன்னர் அப் பெற்றவர். இதனைத் தொடர்ந்து, நிறைய மாடலிங் போட்டிகளில் கலந்து கொண்டு வந்துள்ளார்.
பல போட்டிகளில் பங்கேற்று வந்த இவர், சில பல சர்ச்சைகளில் தொடர்ந்து மாட்டி வந்தார். 2016ம் ஆண்டு இவர் பெற்ற பட்டம் திரும்பபெறப்பட்டு சனம் ஷெட்டிக்கு கொடுக்கப்பட்டது.
2015ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் திரிஷா உடன் ஒரு தோழியாக நடித்திருந்தார் மீரா மிதுன். ஆனால், எடிட்டிங்கில் அந்த சீன் நீக்கப்பட்டுவிட்டது.
பின்னர், ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெற்றி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 8 தோட்டாக்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் நடிகர் கலையரசன் மனைவியாக நடித்திருந்தார். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.
இதில் இவருக்கு பெரும் நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தது. போட்டியில் இருந்து வெளியேறிய மீரா மிதுன், பல தகவல்கள் வெளியிட்டார். அதாவது, நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இவர் நடித்ததாகவும் ஆனால் அவை நீக்கப்பட்டுவிட்டதாகவும், இதற்காக புகார் எழுப்பினார்.
பிரபல நடிகர்கள் மற்றும் அவர்களுடைய மனைவி உள்ளிட்ட அனைவரையும் இழிவாக பேசி பட்டியலின மக்கள் குறித்து தரக்குறைவாக பேசி அந்த வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அவர் மீது பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வழக்கு பதிந்து, இவரையும், அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதன்நடுவே, பல சர்ச்சை வீடியோக்கள் பதிவிட்டு அதன் மூலம் பல வழக்குகளில் சிக்கி வருகிறார். இந்நிலையில் மீரா மிதுன், கடந்த 6 மாதங்களாக நீதிமன்றத்திற்கு அலைந்து திரிவதால் வருமானம் இல்லாமல், காசு இல்லாமல், சாப்பாட்டுக்கே வழியிலல்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தன் வளர்ச்சியை யாருக்கும் பிடிக்கவில்லை, தெருவில் எல்லோரும் தன்னை தவறாக பேசுவதால், வீட்டில் தன்னை சேர்த்து கொள்ள மறுக்கிறார்கள், தான் இறந்தால் மட்டுமே, தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் தான், தாம் செய்த சாதனைகள் தெரிய வரும் என்று கண்ணீர் விட்டு கதறியுள்ளார். மீரா மிதுன் மனமுடைந்து கதறி அழும் இந்த வீடியோ வைரலாகி வருகின்றனர்.