'கால்கள் போன பாதை எல்லாம் நான் போகிறேன்'.. மனைவியை நினைத்து ஏங்கும் தனுஷின் வரிகளா ?
நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்கள் கொண்டு தமிழ் திரையுலகில் வலம் வருபவர் தனுஷ். செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம், கேப்டன் மில்லர், டோலிவுட்டில் வாத்தி, ஹாலிவுட்டில் தி கிரே மேன், என அடுத்தடுத்து பிசியாக இருந்து வருகிறார்.
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை தனுஷ் வைத்து இயக்கி வெற்றி படங்களாக கொடுத்த இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு கூடியுள்ளது. படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார்.
இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். படத்தின் ஷூட்டிங் பணி முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகிறது. வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு ஒன்றாக இணையாத நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தில் DNA கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
தொடர்ந்து தனுஷின் படங்கள் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகி வரும் நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம் தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில், தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
உணவு டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ், உயர்நிலைப் பள்ளி தோழி அனுஷாவாக ராஷி கண்ணா, கிராமத்து தென்றல் ரஞ்சனியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனனின் திருச்சிற்றம்பலத்தின் நெருங்கிய தோழியாக ஷோபனாவும், கண்டிப்பான இன்ஸ்பெக்டர் நீலகண்டனாக பிரகாஷ் ராஜ், பாசக்கார தாத்தாவாக பாரதிராஜாவும் நடித்துள்ளனர். இதன் அறிவிப்பு போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் தனுஷ் எழுதி பாடியிருக்கும் தாய் கிழவி எனும் பாடல் வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, அனிருத் மற்றும் தனுஷ் மீண்டும் இணைந்ததால் இப்பாடலை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்தனர். ஆனால் இப்பாடல் ரசிகர்களை துளிகூட திருப்தி படுத்தவில்லை என்பது தான் உண்மை. மேலும், இப்பாடலின் வரிகள் குறித்து சர்ச்சையும் கிளம்பியது.
அனிருத் இதுவரை இசையமைத்த பாடல்களிலேயே தாய் கிழவி தான் சுமாரான பாடல் என்பது போன்ற கருத்துக்களை வெளியிட்டு தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘மேகம் கருக்காதா’ என்னும் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலையும் தனுஷ் எழுதி பாடியுள்ளார். இதன் வீடியோவில், தனுஷ் தனித்தனியாக நித்யா மேனன் & ராஷி கண்ணா ஆகியோர் நடனமாடி உள்ளதை போல காட்டப்பட்டுள்ளது.
தற்போது, இதில் இடம்பெற்றுள்ள ‘கால்கள் போன பாதை எல்லாம் நான் போகிறேன்’, ‘இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று கேட்கிறேன்’, ‘பழைய ரணங்கள் மறக்குதே’ போன்ற வரிகள் தனது மனைவியை நினைத்து ஏங்கி தனுஷ் எழுதியுள்ளாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.