'விண்ணைத்தாண்டி வருவாயா - 2' குறித்த பிரம்மாண்ட அப்டேட்டை சிம்பிளாக தந்த கவுதம் மேனன் !
காதல் திரைப்படங்கள் என்றாலே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் இயக்குனர் கவுதம் மேனன். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் பணியாற்றியுள்ளார்.
மின்னலே, வாரணம் ஆயிரம் தொடர்ந்து 2010ம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் இவருக்கு பெரும் அங்கீகாரத்தை பெற்றுத்தந்து இளசுகளின் பேவரைட் இயக்குனராக மாறிவிட்டார்.
சிம்பு, த்ரிஷா, கணேஷ், நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் பெரும் வெற்றி பெற்று, தற்போது வரை இளசுகளின் பேவரைட் ஆக உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் செம ஹிட்.
பொதுவாக ஒரு படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகிவிட்டால், அதன் 2ம் பாகம் குறித்த கேள்வி ரசிகர்களிடையே எழத்தொடங்கிவிடும். அந்த வகையில், 10 வருடங்கள் ஆகியும் விண்ணைத்தாண்டி வருவாயா 2 படம் குறித்த கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கிறது.
கொரோனா ஊரடங்கு சமயத்தில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தை இப்படத்தின் தொடர்ச்சியாக எடுத்து வெளியிட்டார் கவுதம் மேனன். இதன்பின்னர் பல்வேறு படங்களில் அவர் பிசியானதால் 2ம் பக்கம் குறித்த எந்த பேச்சும் இல்லை.
இந்நிலையில், சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் கவுதம் மேனனிடம், சிம்பு - திரிஷாவை வைத்து எப்போது படம் எடுப்பீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு, நிச்சயம் எடுப்பேன்.. விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளும் நடந்து வருவதாக கவுதம் மேனன் பதிலளித்தார். அவரின் இந்த பதில் இளசுகளை, ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.