வலிமை ரிலீஸ் அன்று கோவை தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு காரணமாக தேடப்பட்டு வந்த இளைஞர் உயிரிழப்பு.!
கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி தமிழகம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படம் வெளியானது. இதனையொட்டி, கோவை காந்திபுரம் 100 அடி ரோடு பகுதியில் உள்ள கற்பகம் காம்ப்ளக்ஸ் சினிமா தியேட்டரில் அதிகாலை 4 மணிக்கு ரசிகர் மன்றத்தினருக்கான சிறப்பு காட்சி நடந்தது. அப்போது தியேட்டர் முன் ரோட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
பெட்ரோல் நிரப்பிய பாட்டிலுடன் வந்த 2 பேர் தீ பற்றவைத்து அதை வாகனங்கள் நிறுத்தும் ரோட்டோர பார்க்கிங் முன் வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்றனர். இதில், நவீன்குமாருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ரத்தினபுரியை சேர்ந்த லட்சுமணன் என்பவரை சில நாட்களுக்கு முன் காட்டூர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ரசிகர்களுக்கு கூடுதல் விலையில் டிக்கெட் விற்றதில் ஏற்பட்ட மோதலால், பெட்ரோல் குண்டு வீசியதாக விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கில் லட்சுமணனின் கூட்டாளிகளான தலைமறைவான பாளையங்கோட்டையை சேர்ந்த தவசி என்கிற அந்தோணி, சுரேஷ், முருகன் ஆகியோரை தேடி வந்தனர். இந்நிலையில் தவசி, சுரேஷ், முருகன் ஆகிய 3 பேரும் நெல்லை முன்னீர்பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கினர்.
இதில், தவசி (எ) அந்தோணி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுரேஷ், முருகன் ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.