விவசாயிகளுக்கு மின் மோட்டார் வாங்குவதற்காக மானியம் வழங்கப்படும்.! அமைச்சர் என்.கயல்விழி தகவல்

ஆதிதிராவிடர் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ), கட்டுமானப்பிரிவு பொறியாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களின் ஆய்வுக்கூட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையிலும் சென்னை எழிலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல ஆணையரக அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
முதல்வரின் முகவரியின் மூலம் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், மனுக்களின் மீது உள்ள குறைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கவனத்திற்கு கொண்டு சென்று பெறப்பட்ட மனுக்களின் மீது முழுமையான தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி மற்றும் விடுதி கட்டட பணிகளை விரைந்து முடித்திடவும், கட்டடங்கள் சூரிய ஒளியுடன் கூடிய மின்வசதிகள் மற்றும் பயோ செப்டிக் டேங்க் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளவும், மிகவும் பழுதடைந்த பள்ளி மற்றும் விடுதி கட்டடங்களை கண்டறிந்து உரிய அனுமதி பெற்று இடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன விவசாயி நிலங்களுக்கான துரித மின்இணைப்பு வழங்கும் திட்டத்தில் மதிப்பீட்டில் அவர்களது பங்கு தொகையாக 10 சதவீதம் செலுத்தினால், உடன் தாட்கோ மூலம் மின்இணைப்பு வழங்கப்படும் என்பதையும், மின் மோட்டார் வாங்குவதற்கான மானியம் ரூ.10,000 மற்றும் வயல்வெளியில் நீர் வழி குழாய் அமைக்க ரூ.15,000 மானியம் வழங்கப்படும் என்பன போன்ற திட்டங்களை எளிதில் மக்களை சென்றடைந்து பயன் பெற ஏதுவாக ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களை அணுகி அவர்கள் மூலம் பயனாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.