திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்..? - மத்திய கலாசார அமைச்சகம் பதில்
உலக அளவில் பாரம்பரிய, கலாசார இடங்களை கண்டறிந்து, அதை யுனெஸ்கோ அமைப்பு அடையாளப்படுத்தி வருகிறது. அதன்படி, இந்தியாவில் உள்ள பாரம்பரிய இடங்களை, மத்திய அரசின் கலாசார அமைச்சகம் பட்டியலிட்டு, யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சி செய்து வருகிறது.
சென்னை, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஜெகன்நாத், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவர், தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியத்தை பறைசாற்றும் 25 இடங்களை பட்டியலிட்டு, அவற்றுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற, மத்திய கலாசார அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார். அதற்கு மத்திய கலாசார அமைச்சகம், அவருக்கு பதில் அனுப்பியுள்ளது.
இது குறித்து, வழக்கறிஞர் ஜெகன்நாத் கூறியதாவது: இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியத்தை பறைசாற்றும் இடங்கள் குறித்து ஆய்வு செய்தேன். சென்னை உயர் நீதிமன்ற பாரம்பரிய கட்டடங்கள், கொல்லிமலை, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், கடலுார் பண்ருட்டி திருவதிகை கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில், சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவில், பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் பொற்கோவில் உள்ளிட்ட 25 இடங்களின் விபரங்களுடன், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம் என மத்திய கலாசார அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தேன். இது தொடர்பாக, மத்திய கலசார அமைச்சகம் எனக்கு பதில் அனுப்பி உள்ளது.
அதில், நீங்கள் அனுப்பிய பட்டியலில் உள்ள, ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோவில், அமிர்தசரஸ் கோவில் இரண்டும், ஏற்கனவே யுனெஸ்கோ அங்கீகாரம் பெறுவதற்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கள் பட்டியலில் உள்ள மற்ற இடங்கள் குறித்து ஆய்வு செய்ய அந்தந்த மாநில தொல்லியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது என கூறினார்.