முதலமைச்சர் ஸ்டாலினின் 'உங்களில் ஒருவன்' சுயசரிதை புத்தகம்: சென்னையில் வெளியிட்டார் ராகுல் காந்தி...!!
சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ சுயசரிதை புத்தகத்தின் முதல் பாகத்தை ராகுல் காந்தி வெளியிட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பள்ளி-கல்லூரி படிப்பு காலம், இளமை காலம், அரசியல் ஆர்வம், முதல் அரசியல் கூட்டம், முதல் பொதுக்கூட்ட பேச்சு, திரையுலகில் கால் தடம் பதித்தது, திருமண வாழ்க்கை, மிசா காலத்தின் தொடக்கம் என 1976ம் ஆண்டு வரையிலான 23 ஆண்டு கால வாழ்க்கை பயண வரலாற்று சுவட்டை சுயசரிதை புத்தகமாக எழுதி உள்ளார்.
இந்த புத்தகத்திற்கு உங்களில் ஒருவன் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் இன்று நடைபெறும் விழாவில் வெளியிடப்பட்டது.
உங்களில் ஒருவன் புத்தகத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி வெளியிட்டார். இந்த விழாவில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் நூல் ஆசிரியரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்தினார்.
விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார். தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. முன்னிலை வகித்தார். தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. வரவேற்று பேசினார்.