TASMAC கடைகளில் இனிமேல் இதெல்லாம் கட்டாயம்.. அதிரடியான நியூ ரூல்ஸ் !
டாஸ்மாக் கடைகளுக்கு அளிக்கப்பட்ட புது ரூல்ஸ். டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் தற்போது வெளியிட்டடுள்ள சுற்றறிக்கையில் - டாஸ்மாக் சாதாரண மற்றும் உயர் ரக எலைட் (Elite) மதுபான சில்லரை விற்பனை கடைகளில் ‘பில்’ புத்தகம், தினசரி சிட்டா, ஸ்டாக் இருப்பு, விற்பனை, வருகை, ஆய்வு உள்பட 21 பதிவேடுகளை முறையாக தினந்தோறும் பராமரிக்க வேண்டும்.
ஆய்வின்போது இந்த ஆவணங்கள் சரியாக இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடை ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். சமீபத்தில் ‘எலைட்’ மதுபான கடைகளை ஆய்வு செய்தபோது சில குறைபாடுகள் கண்டறியப்பட்ட நிலையில், கிடங்குகளில் இருந்து ‘எலைட்’ கடைகளுக்கு ‘புல்’ (750 மி.லி.) அல்லது ஒரு லிட்டர் (1,000 மி.லி.) அளவிலான உயர்ரக மதுபானங்கள் மட்டுமே விற்பனைக்கு அனுப்பப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனையாகும் மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். அதில் மதுபானத்தின் பெயர், அளவு, அரசு நிர்ணயித்த விலை மற்றும் கடை ஊழியர்களின் கையொப்பம் இருக்க வேண்டும். மதுபானங்கள் விலை பட்டியல் இருப்பு பட்டியலுடன் கட்டாயம் வைக்கப்பட வேண்டும்.
உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்பட்ட நாளில் இருந்து 90 நாட்களுக்குள் விற்பனை செய்திட வேண்டும். 90 நாட்களுக்கு மேற்பட்ட மதுபானங்கள் இருப்பில் இருக்கக் கூடாது. மதுபானங்கள் விற்பனையை அதிகளவில் ‘பி.ஓ.எஸ்’ (POS) எந்திரம் மூலம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த அறிவுரைகளை மீறும் கடை ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையை அந்தந்த மாவட்ட மேலாளர் எடுக்க வேண்டும். இல்லையெனில் மாவட்ட மேலாளர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.