ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை: உக்ரைனில் தற்காலிக போர்நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் பேச்சு..!!
புதுடெல்லி: ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக சுமார் 50 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நிலை குலைந்து வருகிறது. இதனால், அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.
இதற்காக ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தை செயல்படுத்தி மீட்பு பணிகளை முடுக்கி விடப்பட்டு ஏராளமான இந்தியர்கள் மீட்டு கொண்டு வரப்பட்டனர். மீட்பு பணி, போர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியும் அவ்வப்போது ரஷ்யா அதிபர் மற்றும் உக்ரைன் அதிபருடன் பேசி வருகிறார். அந்த வகையில், இன்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேசியுள்ளார். இரு தலைவர்களுடனான இந்த உரையாடல் சுமார் 50 நிமிடம் வரை நீடித்தது. உக்ரைனில் தற்போது நிலவி வரும் சூழல் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான பேச்சுவர்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புதின் எடுத்துரைத்ததாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.