தேனி மக்களுக்கு ஹேப்பி நியூஸ் ! மதுரை டூ போடிநாயக்கனூர் ரயில் சேவை விரைவில் தொடக்கம் !
மக்களவையில் பேசிய அதிமுக எம்.பி ரவீந்திரநாத், மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு நன்றி கூறியதோடு பேசியவை பின்வருமாறு,
மதுரை - போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை பணிகளுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை - போடிநாயக்கனூர் இடையிலான ரயில் சேவை சுமார் 50 ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது. ஆனால், அகல ரயில் பாதை பணிகளுக்காக கடந்த 2010ஆம் ஆண்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
தேனி ரயில் நிலையம் வரை முழுமையாக செயல்படுவதற்கு கட்டமைப்புகள் தயாராக இருக்கும் நிலையில் ஒப்புதல் ரயில்வே அமைச்சகத்தின் முன்னிலையில் உள்ளது. மதுரை - போடிநாயக்கனூர் ரயில் சேவை தொடங்கப்பட்டால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர், பொதுமக்கள் உள்ளிட்டோர் பயன்பெறுவர்.
குறிப்பாக மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எளிதில் சென்றுவர உதவும். விவசாயம் மற்றும் தோட்டக்கலை துறையின் மிகப்பெரிய மையமாக தேனி திகழ்கிறது. இந்த ரயில் சேவையின் மூலம் விவசாயிகள் தங்களுடைய உற்பத்தி பொருட்களை குறைந்த போக்குவரத்து செலவில் வெளி ஊர்களுக்கு கொண்டு செல்ல பெரிதும் உதவும்.
மதுரை - போடிநாயக்கனூர் ரயில் பாதையானது மின்மயமாக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி திண்டுக்கலில் இருந்து வத்தலகுண்டு, தேனி, பெரியகுளம், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், லோயர் கேம்ப் வரை புதிய ரயில்வே வழித்தடத்தை உருவாக்க வேண்டும். இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டால் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் கேரளா வரை செல்லும் சுற்றுலா பயணிகள், சபரிமலை செல்லும் பக்தர்கள் உள்ளிட்டோருக்கு உதவும் என்றார். தமிழகத்தில் அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போது இந்த பகுதிகளில் பொருளாதாரம் மேம்படும் என்று வலியுறுத்தினார்.