ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்த்தப்பட்ட மதுபானங்கள் விலை ! அதிர்ச்சியில் மதுபிரியர்கள் !
தமிழகத்தில் 5,436 டாஸ்மாக் மதுக்கடைகளும், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகளுடன் மதுக்கூடங்கள் இணைந்து செயல்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மதுபானங்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு கொரோனா பரவல் காலத்திலும் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் மதுபானங்களுக்கு விதிக்கக் கூடிய ஆயத்தீர்வை மற்றும் விற்பனை வரியை உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அனைத்து வகையான மதுபானங்களும் குறைந்தது ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அனைத்து மதுக்கடைகளுக்கும் இந்த புதிய விலை உயர்வு பட்டியலை மாவட்ட மேலாளர்கள் நேற்று இரவே அனுப்பியுள்ளது. மேலும், மதுபான விலை பட்டியலை கடையின் முன்பகுதியில் ஒட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுபானங்கள் விலை உயர்வு இன்று (7ந் தேதி) முதல் தமிழகம் முழுவதும் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
சாதாரண ரக மது வகைகள் 1/4 பாட்டிலுக்கு ரூ.10ம், நடுத்தர மற்றும் உயர் ரக மது பானங்களுக்கு ரூ.20ம், சாதாரண ரக 1/2 பாட்டிலுக்கு ரூ.20ம், நடுத்தர மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.40ம் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சாதாரண ரக முழு பாட்டிலுக்கு ரூ.40ம், நடுத்தர மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.80 வரையும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பீர் வகைகளுக்கு ரூ.10 அதிகரிக்கப்பட்டுள்ளது. புல்லட் சூப்பர் ஸ்ட்ராங் ரூ.120 ஆகவும், கிங் பிஷர் ஸ்ட்ராங் ரூ.140 ஆகவும், கிங் பிஷர் கிளாசிக் ரூ.150 ஆகவும், கிங் பிஷர் மேக்னம் ஸ்ட்ராங் ரூ.160 ஆகவும் உயர்ந்துள்ளது.
இன்று பகல் 12 மணிக்கு கடைகள் திறந்தவுடன் புதிய விலையில் மதுபானங்கள் விற்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிராந்தி, விஸ்கி, ரம், பீர் விலை உயர்ந்தபோதிலும் ஒயின் விலையில் மாற்றம் செய்யவில்லை என்று டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டதன் மூலம் டாஸ்மாக் நிறுவனத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.10.35 கோடி கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.