ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்ட்டர் தாக்குதல்: பயங்கரவாதி சுட்டுக்கொலை..!!
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளான்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். ஷர்மர்க் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர்.
இந்த பதிலடி தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும், பயங்கரவாதிகள் அங்கு பதுங்கி இருப்பதால் துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.