அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவுடன் இந்தியா கச்சா எண்ணெய் ஒப்பந்தம் ? வெளியான தகவல்
கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி தொடங்கி பரபரப்பாக பேசப்பட்டு வரும் உலகளாவிய பிரச்சனை தான் ரஷ்ய- உக்ரைன் போர். இதற்கு எதிராக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இதனால் ரஷியாவின் பொருளாதாரம் அடி வாங்கி உள்ளது.
மற்றொரு பக்கம் இந்தியா இந்த பிரச்னையில் நடுநிலைமை வகித்து வருகிறது. இந்நிலையில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதில், இந்தியாவுக்கு ரஷியா சலுகை விலையில் 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வழங்க முன்வந்துள்ளது. இது ஐ.ஓ.சி., எனப்படும் ‘இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்’ சார்பாக வாங்கப்படுகிறது.
அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மலிவு விலை கச்சா எண்ணெய் விரைவில் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா தனது எரிசக்தித் தேவைகளில் 80 சதவீதத்திற்கும் மேலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதையே பெரிதும் நம்பியுள்ளது. இந்த ஒப்பந்தம் இன்று (மார்ச் 19) இறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் சர்வதேச விலையில் இருந்து ஒரு பேரலுக்கு 20 முதல் 25 டாலர்கள் குறைவாக கச்சா எண்ணெய் நமக்கு கிடைக்க உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.