மார்ச் 11ம் தேதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சிறை: ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்..!!
சென்னை: திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது கள்ள வாக்கு செலுத்த முயன்ற தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கியது தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விசாரணைக்குப் பின் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஜாமின் கோரி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து ஜெயக்குமார் தரப்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கைதாகி சில நாட்களே ஆனதாலும், விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதாலும் ஜாமின் வழங்க முடியாது என நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியது. இந்த நிலையில், திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் தனக்கு ஜாமின் கேட்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
புகார் அளித்தவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார், உடலில் காயங்கள் இல்லை. அரசியல் காரணங்களுக்காக கொலை முயற்சி என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தனது மனுவில் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.