இழப்புகளை ஈடு செய்ய மின் நுகர்வு கட்டணகட்டணங்கள் உயரும் அபாயம்..!
நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிற்கு மின்துறை அமைச்சகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள குறிப்பில், பல்வேறு மாநில மின்சார விநியோக நிறுவனங்கள் தாமதமான கட்டண விவரங்களை தாக்கல் செய்வதாக குற்றம் கூறப்பட்டுள்ளது.
36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 17 மாநிலங்கள் மட்டுமே 2021, 2022ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட கட்டண விவரங்களுடன் சரியான கணக்கை அளித்து இருப்பதாக கூறியுள்ளது.
12 மாநிலங்கள் 2021 ஏப்ரல், நவம்பர் மாதங்களுக்கு இடையே விவரங்களை தந்து இருப்பதாகவும் 7 மாநிலங்கள் கட்டண விவரங்களை வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட விலையில் மின்சாரம் வழங்க விநியோக நிறுவனங்களுக்கு உத்தரவிடும் மாநில அரசுகள், மானியங்களை சரியான நேரத்தில் செலுத்துவதில்லை என்ற குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனால் மாநில அரசுகளின் கடன் ரூ.59,489 கோடியாக அதிகரித்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், மராட்டியம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் மிக மோசமாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2019 -2020ம் ஆண்டில் மட்டும் 5.2 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு, இதே காலகட்டத்தில் மின் விநியோக நிறுவனங்கள் 4.9 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
மின் விநியோக நிறுவனங்களின் மோசமான கணக்கு பார்த்தல் மற்றும் வசூல் திறன் மட்டுமே இதன் காரணம் என கூறப்பட்டுள்ளது. எனவே அதிகரித்து வரும் செலவீனங்களை சமாளிக்க மின்விநியோக நிறுவனங்கள் சரியான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மின் அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.
இந்த நடவடிக்கையை மாநிலங்கள் முழுவதுமாக ஏற்றுக் கொண்டால், நாடு முழுவதும் மின் கட்டணம் உயரும் அதிர்ச்சி சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.