சீனாவையடுத்து அமெரிக்காவில் வேகமெடுக்கும் ‘டெல்டாக்ரான்'.. அப்போ இதுதான் 4வது அலையா?
2019ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்போது வரை பரவி பலரை பாடாய் படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் குறைந்ததை எண்ணி மக்கள் அச்சம் தவிர்த்து இருந்தனர். இந்நிலையில், சீனாவில் உள்ள ஒரு நகரில் தொற்று வேகமெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும், சீனாவைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தினசரி பாதிப்பு இருமடங்காக அதிகரித்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் வௌியிட்ட அறிக்கையில், ‘டெல்டாக்ரான்’ வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன என தெரிவித்துள்ளது. எனவே, டெல்டாக்ரான் வைரஸ் தொற்று பரவல், உலகம் முழுவதும் புதிய அலையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 1 - 10ம் தேதி வரை ஒப்பிடும்போது, மார்ச் 1 - 10 வரை அமெரிக்கா முழுவதும் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் ஒமிக்ரானின் உருமாற்றம் அடைந்த வைரஸ் வேகமாக பரவுகிறது. அமெரிக்க அதிபரின் முன்னாள் மூத்த ஆலோசகர் ஆண்டி ஸ்லாவிட்டின் கூற்றுப்படி, அமெரிக்காவில் ஒமிக்ரானை விட 30 சதவீதம் வேகமாக பரவுவதால், நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது. டெல்டாக்ரான் வைரஸ் தொற்று அமெரிக்காவின் சில பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன. இது ஒரு புதிய அலையை ஏற்படுத்தலாம்’ என்றார்.