மறுபடியுமா... ஹாங்காங்கில் அதிகரிக்கும் கொரோனா பரவல்..!
கடந்த 2 ஆண்டுகளில், உலகம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து, மருத்துவ உதவிக்காக நடந்த இன்னல்கள் குறித்து அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், அதிஷ்டவசமாக, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆசிய நாடான ஹாங்காங்கில், கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா வைரசால் 12 ஆயிரம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர்.
கடந்த டிசமபர் மாதம் ‘ஒமைக்ரான்’ வகை கொரோனா வைரஸ் அந்நாட்டில் பரவத் துவங்கியது. இதனால், சமூகப் பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளும் விதித்து, வெளிநாட்டு விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.
இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகி ஒமைக்ரான் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்பு, ‘லேசான கொரோனா அறிகுறி இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்’ என கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது போதிய இடவசதி இல்லாமல், பாதிப்பிற்குள்ளானோர் மருத்துவமனைகள் முன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். லேசான அறிகுறி இருப்போரை வீட்டிலேயே தனிமையில் இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
சமீபத்திய கணக்கின்படி, 12 ஆயிரம் பேர் காத்திருப்பதாக தெரிகிறது. இதை சமாளிக்கும் வகையில், தற்காலிகமாக மெகா மருத்துவமனை உருவாக்க, அரசு தரப்பில் இடம் தேடப்பட்டு வருகிறது.
வைரஸ் பரவல் அதிகரிப்பிற்கான முக்கிய காரணம், முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதது தான் எனவும், இதற்கு அதிகாரி ஒருவர் கூறியதாவது :
‘ஹாங்காங்கில் குழந்தைகள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு முறையாக தடுப்பூசி செலுத்தப்படவில்லை. 70 முதல் 79 வயதிற்கு உட்பட்டோரில் 43 %, 80 வயதிற்கு மேற்பட்டோரில் 27 % பேர் மட்டுமே இரு ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.அனைவரும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மட்டுமே இதற்கு தீர்வாக அமையும்’ என கூறினார்.