அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு
தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க கடந்த சனிக்கிழமை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையில் வாக்கப்பதிவு நடைபெற்றது. சில இடங்களில் மட்டும் கட்சியினர் இடையே வாக்குவாதம், ஹிஜாப் சர்ச்சை என நடந்தது.
இதனிடையே, சென்னை ராயபுரத்தில் 49வது வார்டு வாக்குச்சாவடியில் திமுகவினர் சிலர் கள்ள ஓட்டுப் போட முயன்றதாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டினர். அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அங்கு வந்திருந்தார்.
அப்போது, கள்ள ஓட்டுப் போட்டுவிட்டுத் தப்ப முயன்றதாகக் ஒருவரைப் பிடித்து அதிமுகவினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த நபரை அரை நிர்வாணப்படுத்தி போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
தற்போது, திமுகவைச் சேர்ந்த நரேஷ் அளித்த புகாரில் தண்டையார்பேட்டை போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல திமுகவினர் தன்னை தாக்கியதாக ஜெயக்குமாரின் கார் ஓட்டுநரும் புகார் அளிக்கவே அடையாளம் தெரியாத திமுகவினர் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.