சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி - தமிழக அரசு ஏற்பாடு
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள 5 நட்சத்திர விடுதிகளில் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் அறிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை மற்றும் வீரர்களின் மேம்பாட்டிற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருமாறு கூறி, 2021ல் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.1.98 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. 200 நாடுகளிலிருந்து சுமார் 2000 வீரர்கள் இந்த செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
முதலமைச்சரின் முயற்சியில் தான் செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடத்தப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டுவிட்டரில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவின் செஸ் தலைநகரான சென்னையில் நடைபெற இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இது தமிழகத்துக்கு பெருமையான நிகழ்வு. உலகெங்கிலும் இருந்து வரும் வீரர் மற்றும் வீராங்கனைகளை சென்னை நகரம் அன்போடு வரவேற்கிறது என பதிவிட்டிருந்தார்.
Delighted that the Chess Capital of India is set to host the 44th Chess Olympiad! A proud moment for Tamil Nadu! Chennai warmly welcomes all the Kings and Queens from around the world!#ChessOlympiad2022
— M.K.Stalin (@mkstalin) March 15, 2022