அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீடு உள்பட 58 இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
அதிமுக கட்சியில் முக்கிய நபர்களாக கருதப்படும் சிலரில் எஸ்.பி. வேலுமணி அவர்களும் ஒருவர். கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் அதிமுக சட்டப் பேரவை கொறடாவாகவும் உள்ளார்.
இந்நிலையில், இவருக்குச் சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமானத்தை விட கூடுதலாக 58.23 கோடிக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பத் துறையினர் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, எஸ்.பி. வேலுமணி அவர்களின் வீடு உள்பட 58 இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
மேலும், அவருக்கு தொடர்புடையவர்களிடமும் சோதனை நடைபெற்று வருகிறது. மைல்கல் பகுதியில் உள்ள எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தியபோது, அப்பகுதியில் அதிமுக தொண்டர்கள் பெருமளவில் திரண்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.