24வது மாதமாக பௌர்ணமி கிரிவலத்திற்கு தொடரும் தடை - திருவண்ணாமலையில் அலைமோதிய கூட்டம்
பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அக்னி ஸ்தலமாகவும், முக்தித் தரும் திருத்தலமாகவும் கருதப்படுகிறது. மாதந்தோறும் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம். தீபத்திருவிழா, சித்ரா பவுர்ணமி நாட்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
ஆனால், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக, கடந்த 2020ம் ஆண்டு மார்ச் முதல் திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையிலும், கிரிவலத்துக்கான தடை நீக்கப்படவில்லை.
தொடர்ந்து இது 24வது மாதமாக பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. எனவே, கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்களை தடுத்து போலீசார் திருப்பி அனுப்பினர்.