திடீர் தர்ணாவில் ஈடுபட்ட அதிமுகவினர் - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..
நாளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், நேற்றோடு பிரச்சாரம் முடிவு பெற்றது. இந்நிலையில், இன்று, தேர்தலை நியாயமாக நடத்த வலியுறுத்தியும், தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திமுகவினரை கண்டித்தும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள், கட்சியினர் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த திடீர் தர்ணா குறித்து எஸ்.பி. வேலுமணி கூறியதாவது, ‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கோவை கலவர பூமியாக மாற்றப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி வெளியூர் குண்டர்கள் - ரவுடிகள் களமிறக்கி அதிமுகவினரை தாக்குகின்றனர், பொதுமக்களை மிரட்டுகின்றனர். இதற்கெல்லாம் காவல்துறையும் துணை. காவல்துறை சாதகம் என ஆவேசமாக கூறினார்.
காவல்துறை அதிகாரிகளை மாற்றுமாறு நாங்கள் பலமுறை மனு கொடுத்த போதிலும், அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போடப்படுகிறது. ஆட்சியரிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. இங்கு அதிமுக வெற்றி பெறும் சூழல் இருக்கும் காரணதினால் திமுகவினர் இத்தனை குழப்பம் செய்கின்றனர்.
இதே நிலை நீடித்தால் நாளை வாக்குப்பெட்டியைக் கூட தூக்குவார்கள். இதனால் தேர்தல் நியாயமாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்’ என தெரிவித்தார்.
இந்த முன்னறிவிப்பில்லாத தர்ணா போராட்டத்தினால் பரபரப்பான சூழல் நிலவியது. இது குறித்து ஆட்சியர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.