பேரறிவாளன் விடுதலை : ஆதரிக்கும் அண்ணாமலை.. எதிர்க்கும் காயத்ரி.. வைரலாகும் பதிவு.. ஒரே கட்சியில இப்படி?
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர் பேரறிவாளன்.
சில பல காரணங்களால் 30 வருடங்கள் சிறை வாழ்க்கை அனுபவித்தவர். முதலில் தூக்கு தண்டனை கொடுக்கப்பட்ட நிலையில், 2014ம் ஆண்டு மனுவின் அடிப்படையில் மறுபசீலிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
31 ஆண்டுகள் கழித்து நீதிமன்றமே இந்த பேரறிவாளன் விடுதலை குறித்த வழக்கை கையிலெடுத்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, நேற்று பேரறிவாளன் விடுதலையானார்.
இந்த தீர்ப்பை பேரறிவாளன் குடும்பத்தினர் மட்டுமல்லாது பொது மக்கள், அரசியல் சார்ந்த பிரமுகர்கள், திரையுலகினர் என பல தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர்.
ஜோலார்பேட்டையில் உள்ள தன்னுடைய வீட்டில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி தன் விடுதலையை கொண்டாடி இருக்கிறார் பேரறிவாளன். மேலும், பேரறிவாளன் விடுதலைக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்திருக்கிறார். இந்த 31 ஆண்டுகாலம் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சந்தித்த போராட்டங்களும், புறக்கணிப்புகளும் நாம் அனைவரும் அறிவர்.
விடுதலைக்கு பின் பேரறிவாளன் பேட்டியில் பத்திரிகையாளர்களுக்கு பேசியபோது, ‘நல்லவர்கள் வாழ வேண்டும் என்பது இயற்கையின் நியதி. எனது போராட்டம் தனிப்பட்ட போராட்டமல்ல. சிறை வாழ்க்கையின் போது தமிழர்கள் என் மீது மிகுந்த அன்பு செலுத்தி இருந்தார்கள். தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக நினைத்தார்கள்.
முப்பது ஆண்டுகாலம் என்னுடன் இருந்த அத்தனை தமிழர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய அம்மாவின் தியாகம் மற்றும் சட்டப் போராட்டம் மற்றும் என் குடும்பத்தினரின் கிடைத்த வெற்றி தான் இந்த தீர்ப்பு. என் அம்மா ஆரம்ப காலங்களில் அவமானங்கள், புறக்கணிப்புகளை சந்தித்து இருந்தார்.
என் தாய் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை எனக்காகவே அர்ப்பணித்து இருக்கிறார். மேலும், தங்கை செங்கொடியின் உயிர் தியாகம் அளப்பரியது.
எனது விடுதலைக்காக பல்வேறு தரப்பினரும் உதவியிருக்கிறார்கள். என் விடுதலைக்காக போராடிய அனைவரையும் நேரம் கிடைக்கும் போது நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன்’ என்று கூறியிருக்கிறார்.
மேலும், பேரறிவாளன் விடுதலை பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது சந்தோஷங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் பேரறிவாளனில் விடுதலைக்கு ஆதரவே தெரிவித்துள்ளார்.
அவர் ட்விட்டர் பதிவில் ‘பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழ்நாடு பாஜக ஏற்றுக் கொள்கிறது. நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படி இருக்க, பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் பேரறிவாளனின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் ஒரு டயலாக்- நான் இந்த டயலாக்கை தோராயமாக சொல்கிறேன் – “மிகவும் நல்ல சட்டம் உள்ளது, ஆனால் பல ஓட்டைகள் உள்ளன, சில குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகளை மட்டுமே கற்றுக்கொண்டனர். அவர்கள் அதிலிருந்து வெளியே வருகிறார்கள் – எனக்கு இந்த டயலாக் பிடிக்கும்’ எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த இரு விதமான பதிவு குறித்து சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.