ஈபிஎஸ் காரில் ஏற முயன்ற உதயநிதி.. உதயநிதியை செல்லமாக கலாய்த்த அன்பில் மகேஷ் ! வைரல் ஆகும் உரையாடல் !
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் காரில் தவறுதலாக ஏற முயன்றதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூற, “இப்படியே போனால், பக்கத்தில் இருப்பது யார் என்று கூட தெரியாமல், பேசிக்கொண்டே போக வேண்டியது தான்” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிரித்துக் கொண்ட சொன்ன வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி மே 10ம் தேதி வரை தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் தினந்தோறும் ஒவ்வொரு துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
இதில் பொதுவாக, சட்டப்பேரவை உறுப்பினர்களை அழைத்து செல்ல தலைமை செயலக வளாகத்தில் அவர்களின் கார்கள் தயாராக நிற்பது வழக்கம். அப்படி, கடந்த 12ம் தேதி கூட்டம் முடிந்து வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய கார் என நினைத்து தவறுதலாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்றார். அவரது உதவியாளர் அதைச்சுட்டிக்காட்டவும் சுதாரித்துக் கொண்டு தனது காருக்குப் போனார் எடப்பாடி பழனிசாமி. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
அதே போல தற்போது, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார் ஆகியோர் சட்டப்பேரவை வெளியே பேசிக் கொண்டு வருகின்றனர். அப்போது உதயநிதி ஸ்டாலின், “ 3 நாட்களுக்கு முன்பு, இப்படித்தான் நானும் எடப்பாடி பழனிசாமி காரில் ஏற பார்த்தேன். காரின் முகப்பில் ஜெயலலிதா அவர்கள் போட்டோ இருப்பதை பார்த்ததுமே சுதாரித்து கொண்டேன்” என்றார்.
இதை கேட்டதும் அமைச்சர் அன்பில் மகேஷ், “இப்படியே போனால், பக்கத்தில் இருப்பது யார் என்று கூட தெரியாமல், பேசிக்கொண்டே போக வேண்டியது தான்” என காமெடியாக கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.