கோவையில் இன்று மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம்..
வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடைவதால் தேர்தல் பிரசார களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
அனைத்து முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் நகர்ப்புற உள்ளாட்சியில் வெற்றி பெற காணொலி வாயிலாகவும், இணைய வழியிலும் பிரசாரம் மேற்கொண்டார். மேலும் ஒவ்வொரு மாவட்டமாக தாமே கட்சி வேட்பாளர்களுடன் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
இன்று, கோவை மாநகராட்சியில் போட்டியிடும் 100 வேட்பாளர்களை ஆதரித்து, கமல்ஹாசன் அவர்கள் மதுரையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு மதியம் 1.30 மணியளவில் வருகிறார். பின்னர் கார் மூலம் ரேஸ்கோர்சில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்து ஓய்வெடுத்த பின்னர், மாலை 3.30 மணியளவில் கோவையில் போட்டியிடும் மக்கள் நீதிமய்ய வேட்பாளர்களை சந்தித்து ஆலோசிக்கிறார்.
மாலை 4 மணிக்கு பி.என்.பாளையம் காய்கடை பகுதியில் இருந்து பிரசார பயணத்தை தொடங்கி, 4.20 மணிக்கு ரெட்பீல்ஸ் ரோடு, 4.40 மணிக்கு ராமநாதபுரம் 80 அடி ரோடு, 5.10 மணியளவில் சுந்தராபுரம் சந்திப்பிலும் பிரச்சாரம் செய்யவிருக்கிறார்.
தொடர்ந்து கோட்டை மேடு, ஹவுசிங்யூனிட், காட்டூர், காமராஜபுரம், தெப்பக்குளம் மைதானம், ராஜவீதி, கெம்பட்டி காலனி மைதானம், பொன்னையராஜபுரம், சீரநாயக்கன்பாளையம், இடையர்பாளையம் சந்திப்பு, சிவானாந்தா காலனி சந்திப்பு, தனலட்சுமி நகர், மட்டசாலை பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
திறந்த வாகனத்தில் இருந்த படியே மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். கோவையில் பிரசாரத்தை முடித்து விட்டு இன்று இரவே கோவை விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்புகிறார்.