நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு.. ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராகும் முதல் தமிழ் நடிகர் !
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு சிலரில் ஒருவர் நடிகர் சூர்யா. நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்த சூர்யாவிற்கு, ஆரம்ப காலத்தில் பெரிய படங்கள் ஏதும் ஹிட் ஆகாத நிலையில், காக்க காக்க, பிதாமகன், நந்தா, மௌனம் பேசியதே, 7ம் அறிவு போன்ற படங்கள் மூலம் செம பிரபலம் ஆனார்.
மேலும், இவரது நற்குணங்கள் காரணமாக மக்கள் இடையில் இவருக்கு நல்ல பெயரும் உள்ளது. கடந்த வருடம் வெளியான ஜெய் பீம் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து இவரது நடிப்பு கொண்டாடப்பட்டது.
இதன் பின்னர், சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து, தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் 41வது படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன், சுதா கொங்கரா என அடுத்தடுத்த படங்களில் சூர்யா ஒப்பந்தமாகி உள்ளார்.
இதன் நடுவே, சர்ப்ரைஸாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இப்படத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில், மைனா நந்தினி, ஷிவானி, மஹேஸ்வரி, காளிதாஸ் ஜெயராம் என ஒரு ரசிகர் பட்டாளமே நடித்தது. இதில் எதிர்பாராத சஸ்பென்ஸ் விதமாக சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபாத்திரம் நல்ல வரவேற்பு பெற்றது.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா, தனது மனைவியுடன் இணைந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதன் மூலம் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் வெளிவந்த 36 வயதினிலே, கடைக்குட்டி சிங்கம், சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
தற்போது சூர்யா 41, சூரரைப் போற்று இந்தி ரீமேக் என ஏராளமான படங்களை தயாரித்து வரும் 2டி நிறுவனம், சாய் பல்லவி நடித்துள்ள கார்கி படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது.
இந்நிலையில், ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராகும் முதல் தமிழ் நடிகர் சூர்யா என்ற பெருமையை பெற்றுள்ளார்.
397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் நடிகர் சூர்யாவிற்கு, இந்தி நடிகை கஜோல் அவர்கள் பெயரும் அதில் இடம்பெற்றுள்ளது என சொல்லப்படுகிறது.