பொருளாதார தடைகளை நீக்காவிடில் 500 டன் எடையுள்ள சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் விழும் ஆபத்து !
உலகமே பேசக்கூடிய அளவிற்கு நாளுக்கு நாள் ரஷ்யா உக்ரைன் போரானது தீவிரம் அடைந்து கொண்டே செல்கிறது. இதற்கு பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது குற்றம் சாடி, சில சேவைகளை தடை செய்து வருகின்றது. இதனால் ரஷ்யாவின் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து, அந்நாட்டின் பொருளாதாரம் சரிவு அடைந்துள்ளது.
பேஸ்புக், டுவிட்டர், டிக் டாக், அமேசான், சோனி மியூசிக், அமெரிக்கன் வங்கி போன்ற பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய சேவைகளை ரஷியாவில் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
இந்நிலையில் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ் கோஸ் மோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளால் நிதிநிலை பாதிக்கப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையம் செயல் இழக்கக் கூடிய அபாயகரமான சூழல் உருவாகி இருப்பதாக எச்சரித்துள்ளது.
ரஷ்யாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடை எதிரொலியாக சர்வதேச விண்வெளி நிலையம் செயலிழந்து பூமியை தாக்கக் கூடிய ஆபத்து இருப்பதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ரஷிய விண்வெளி அமைப்பின் தலைவர் டிமிட்ரி ரோகோசினின் கூறியதாவது, ‘இந்த பொருளாதார தடைகள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சேவை செய்யும் ரஷிய விண்வெளி கப்பல்களின் செயல்பாட்டை சீர்குலைக்கும். இதன் விளைவு இறுதியாக, 500-டன் கட்டமைப்பு கொண்ட சர்வதேச விண்வெளி நிலைய கட்டமைப்பு கடல் அல்லது நிலத்தில் வந்து விழும்’ என எச்சரித்துள்ளார்.
எனவே ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் அனைத்தும் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
#BREAKING Russia warns sanctions could cause ISS to crash: official pic.twitter.com/dYTZTYd8kQ
— AFP News Agency (@AFP) March 12, 2022