ஸ்பெஷல் கட்டண தரிசனம் ரத்து ! திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செயல்படுத்தப்பட்ட புதிய வழிமுறை !
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரசித்தி பெற்ற ஸ்தலம். தற்போது இந்த ஸ்தலத்தில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய இந்து அறநிலையத்துறை ஆணையர் சில நிபந்தனைகளுடன் கூடிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, கோயிலில் நடைமுறையில் உள்ள 250 ரூபாய் சிறப்பு தரிசன கட்டணம் மற்றும் 20 ரூபாய் கட்டண தரிசனம் முறை ரத்து செய்யப்படுகிறது. 100 ரூபாய் கட்டணம் மற்றும் பொது தரிசனம் மட்டுமே நடைமுறையில் இருக்கும்.
இந்த இரண்டு தரிசன முறையிலும், இருவரிசையில் வருபவர்களும் சமமாக நின்று மூலவரை தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் 9ம் தேதி அதாவது இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த முறை இன்று முதல் 15 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் நடைமுறையில் இருக்கும் என கோயில் இணை ஆணையர் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி விஐபி தரிசனத்திற்கு தனி நேரம் ஒதுக்கப்படுவது குறித்த பல யோசனைகள் உள்ளதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.