நெஞ்சை உலுக்கும் கொடூரம் ! உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல்..
உக்ரைன்-ரஷ்யா போர் கடந்த பிப். 24ம் தேதி தொடங்கிய நிலையில், இன்றும் முடிவுக்கு வரவில்லை. 3 கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்துள்ள போதிலும், சமரசம் ஏதும் ஏற்படாது போர் நடந்து வருகிறது. இதனால் வெளி நாடுகளில் இருந்து படிக்க, வேலை செய்ய வந்த மக்கள் அனைவரும் தாயகம் திரும்பிவிட்டனர்.
உக்ரைன் நாட்டு மக்களும் அகதிகளாய் புலம் பெயர்ந்து வரும் அவல நிலை உருவாகியுள்ளது. இச்சூழலில் இன்று ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர்கள் துருக்கி நாட்டில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் இரு தரப்புக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது.
உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த நிலையில், கீவ், கார்கிவ் மற்றும் துறைமுக நகரமான மரியுபோல் நகரங்களில் மீது தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.
மரியுபோல் நகரில் இருக்கும் முக்கிய கட்டிடங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்றைய தினம் ரஷ்யா ராணுவம் அனுப்பிய ஏவுகணை ஒன்று மரியுபோல் நகரில் இருந்த குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனையைத் தாக்கியுள்ளது.
இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 17 பேர் இந்த தாக்குதலில் காயமடைந்து இருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
எரிந்த நிலையில் இருக்கும் கட்டிடங்கள், கார்கள் மற்றும் மருத்துவமனைக்கு வெளியே ஏற்பட்ட பெரிய பள்ளம் எனத் தாக்குதலின் தீவிர தன்மையை உணர்த்தும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். ரஷ்ய போர் குறித்து மேற்குலக நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், இந்த தாக்குதல் அரங்கேறி உள்ளது
இது குறித்து மரியுபோல் அதிகாரிகள் கூறுகையில், “குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்துவது எந்த விதத்தில் சரி. இது நம்பமுடியவில்லை. ரஷ்யா மிகப் பெரிய குற்றத்தைச் செய்துள்ளது. இது முழுக்க முழுக்க குற்றம்” என சாடியுள்ளார்.
மருத்துவமனைகள் எப்போதும் ராணுவ இலக்காக இருக்கக் கூடாது என ஐ.நா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பாக ரஷ்யா சார்பில் இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.