ஐஐடி கணிப்பின் படி கொரோனா 4 வது அலை வருமா.. வராதா..? சுகாதாரத்துறை அமைச்சரின் பதில்..!
கடந்த 2019ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை கொரோனா பரவல், ஊரடங்கு என பலவற்றையும் உலக நாடுகள் சமாளித்து வருகிறது. குறிப்பாக கொரோனா முதல் அலை, இரண்டாம் அலைகள் தாக்கம் மிக கொடுமையானது.
எண்ணற்ற உயிரிழப்புகள், வேலை இழப்புகள், கல்வி பாதிப்பு, தொழிற்சாலைகள் மூடல், சிறு குறு வணிக நிறுவனங்கள் பாதிப்பு என அனைத்து தட்டு மக்களுக்கும் இந்த கொரோனா பெருந்தொற்று பாதிப்பு பல்வேறு விதத்தில் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் கொரோனா எதிரான தடுப்பூசியை மத்திய அரசு அறிமுகப்படுத்தி, இந்தியாவில் கோவக்சின், கோவிஷீல்ட் உள்ளிட்ட தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
முந்தைய அலைகளை ஒப்பிடும் போது கொரோனா இருந்து உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று, மூன்றாம் அலை குறைந்த அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும், தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 100க்கும் கீழ் குறைந்துள்ளது.
இந்திய அளவிலும் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு என்பது குறைந்த எண்ணிக்கையில் பதிவாகி வரும் சூழலில் தற்போது கொரோனா குறித்த புதிய தகவல் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் அதாவது ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா நான்காவது அலை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய கொரோனா நிபுணர் குழு தலைவர் இக்பால் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே ஜூன் மாதம் இறுதியில் கொரோனா 4 வது அலை ஏற்படும் என கான்பூர் ஐஐடி தெரிவித்துள்ளது. கொரோனா அடுத்த அலை பற்றிய கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பரமணியன், ‘கொரோனா அடுத்த அலை வருமா இல்லையா என்று யாரும் முன்கூட்டியே கணிக்க இயலாது. திருமணத்துக்கு நாள் குறிப்பது போல கான்பூர் ஐஐடி கொரோனா நான்காவது அலை இப்போ வரும், அப்போ வரும் என்று தொடர்ந்து கூறி வருகிறது” என்றார்.