3ம் உலகப் போர் மூளும் அபாயம்.. உக்ரைனில் இருந்து வெளியேற இந்திய தூதரகம் உத்தரவு..
ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. ‘நேட்டோ’ என அழைக்கப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைய உக்ரைன் விரும்பும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை குவித்துள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் குரல் கொடுப்பதுடன், ராணுவ வீரர்களையும், போர் விமானங்களையும் அனுப்பி வருகிறது.
இந்நிலையில், ரஷ்யா தங்கள் நாட்டின் மீது நாளை தாக்குதல் நடத்தக்கூடும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த போர் பதட்டத்தால், ஆஸ்திரேலியா, இத்தாலி, இஸ்ரேல், நெதர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட 10 நாடுகள் தங்கள் மக்களை உக்ரைனில் இருந்து வெளியேற்ற துவங்கியுள்ளது.
அந்த வரிசையில், இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தற்போது உக்ரைனில் நிலவும் சூழ்நிலையில், அங்கு தங்கியிருப்பது கட்டாயம் இல்லாத நிலையில் உள்ள இந்தியர்கள் அனைவரும் தற்காலிகமாக அங்கிருந்து வெளியேற வேண்டும். அத்தியாவசியம் இல்லாத காரணங்களுக்காக உக்ரைனுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணங்களை தவிர்க்க வேண்டும். அங்கு தங்கி இருப்பவர்கள், அவர்களின் நிலை குறித்து தூதரகத்திற்கு தெரிவிக்க வேண்டும். அப்போது தான் தேவைப்படும் சூழ்நிலையில் உதவுவதற்கு ஏதுவாக இருக்கும். உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்களுக்கு அனைத்து சேவைகளையும் வழங்க தூதரகம் தொடர்ந்து செயல்படுகிறது’ எனக் கூறப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்கள் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உக்ரைனில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.