ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை..!
இன்று தொடங்கவிருந்த ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
‘2021 - 2022- ம் கல்வியாண்டுக்கான ஆசிரியர்களுக்கு பொது மாறுதல், பதவி உயர்வுகளுக்கான திருத்திய கால அட்டவணை கடந்த மாதம் 28-ம் தேதி வெளியிடப்பட்டது.
தற்போது, நிர்வாக காரணங்களுக்காக பள்ளிக்கல்வி ஆணையத்தின் கட்டுப்பாட்டில் பணிபுரியும் அரசு, நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு இன்று (15-ம் தேதி) முதல் நடக்க இருந்த பொது மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.
அதேபோல், இடைநிலை ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு இன்று (15-ம் தேதி) வெளியிடப்படும்’
என்று அதில் கூறப்பட்டுள்ளது.