நடுவானில் விமான பயணிக்கு திடீர் நெஞ்சுவலி: விமானியின் துரிதத்தால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.!
பெங்களூருவில் இருந்து கொல்கத்தாவுக்கு சென்ற விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூருவில் இருந்து கொல்கத்தாவுக்கு ‘ஏர் ஏசியா’ விமானம் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணித்த, மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஹபிபுர் கான் என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால், விமானத்தில் இருந்தவர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து இந்த தகவல் அறிந்த விமானி, பயணியின் சிகிச்சைக்காக விமானத்தை அவசரமாக புவனேஸ்வரில் தரையிறக்க அனுமதி கோரினார். அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, புவனேஸ்வர் பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.
விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவக் குழுவினர், ஹபிபுர் கானை பரிசோதித்துப் பார்த்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அரை மணி நேரத்திற்குப் பின் விமானம் மீண்டும் புறப்பட்டது. எவ்வளவோ முயன்றும் பயணியை காப்பாற்ற முடியாதது சக பயணிகளிடையே சற்று சோகத்தை ஏற்படுத்தியது.