பிப்.17ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரங்களுக்கு அனுமதி இல்லை
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில், மாநகராட்சிகளுக்கு 1,347 வார்டு உறுப்பினர்களும், நகராட்சிகளுக்கு 3,843 உறுப்பினர்களும், பேரூராட்சிகளுக்கு 7,621 வார்டு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தற்போது தேர்தல் பரப்புரை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், அரசியல் கட்சிகள் பிப் 17 ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்குள் பரப்புரையை முடித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
தேர்தல் நடத்தை விதிகளின்படி அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஏனைய பிரசாரங்கள் அனைத்தையும் வாக்குப்பதிவு முடிவுறும் நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்கு முன்பாக கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும்.
அதன்படி, தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் 17.02.2022 (வியாழக்கிழமை) அன்று மாலை 6.00 மணிக்கு மேல் மேற்கொள்ளக்கூடாது என்பதை அரசியல் கட்சியினர், வேட்பாளர் கடைபிடிப்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட தேர்தல் அலுவார்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.