பா.ம.கவினர் எதிர்ப்பால் விழுப்புரம் தியேட்டரில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நிறுத்தி வைப்பு !
நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்துக்கு பா.ம.கவினர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து படம் திரையிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கு, 2 வருடகால ஷூட்டிங் என பல இடையூறுவிற்கு நடுவே உருவாகி வெளியானது எதற்கும் துணிந்தவன் திரைப்படம். சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் இன்று அதாவது 10ம் தேதி மார்ச் 2022 வெளியானது.
இதையடுத்து, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கடைவீதியில் உள்ள ஒரு திரையரங்கில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இன்று வெளியிடப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
இதனை அறிந்த செஞ்சி நகர பாமக செயலாளர் சின்னத்தம்பி தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் திரையரங்கை முற்றுகையிட்டு திரைப்படத்தை திரையிடக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிறு பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அறிந்து செஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் படம் வெளியிட எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து திரையரங்க நிர்வாகம் படத்தை வெளியிடுவதை நிறுத்தி வைப்பதாக கூறிய நிலயில், திரைப்படத்தை காண வந்த சூர்யா ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.