கோலாகலமாக தொடங்கவுள்ள IPL.. முதல் ஆட்டம் சென்னை - கொல்கத்தா மோதல் !
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008ம் ஆண்டு முதல் தொடங்கியது. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் இந்த சீரீஸ், 15வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று (26.03.2022) தொடங்குகிறது.
இந்த முறை புதிதாக குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் என்ற 2 அணிகள் அறிமுகம் ஆவதால், மொத்தம் 10 அணிகள் விளையாட போகிறது. இதனால், அதிக தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற அணிகள், அதிக முறை இறுதி சுற்றுக்குள் நுழைந்த அணிகள் என்ற அடிப்படையில் இரு பிரிவாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
‘A’ பிரிவில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், ‘B’ பிரிவில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.
வெவ்வேறு இடங்களுக்கு செல்லும் போது கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால், லீக் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் மராட்டிய மாநிலத்திலேயே நடத்தப்படுகிறது. மும்பையில் உள்ள 3 மைதானங்களில் 55 ஆட்டங்களும், புனேயில் 15 ஆட்டங்களும் இடம் பெறுகிறது. பிளே-ஆப் மற்றும் மே 29ம்தேதி நடக்கும் இறுதிப்போட்டி இடம் விவரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
முதல் ஆட்டத்தில் சென்னை- கொல்கத்தா
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதுகின்றன.
இரு தினங்களுக்கு முன்பு சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி விலகியதால் இப்போது ரவீந்திர ஜடேஜா புதிய கேப்டனாகி இருக்கிறார்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.