முதன்முறையாக நாடாளுமன்றத்தில் ஷூட்டிங் நடத்திய சர்தார் படக்குழு.. !
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வரும் கார்த்தி நடிப்பில் தற்போது விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. கார்த்தியின் 22வது திரைப்படமாக உருவாகி வருவது சர்தார்.
சர்தார் படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், கொரோனா காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் மகேஸ்வர், ஆர்ச்சா, குவாலியர் போன்ற இடங்களிலும், விருமன் படப்பிடிப்பு மதுரை, தேனி மாவட்ட பகுதியில் நடந்தது. இதன் காரணமாக சர்தார் படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன் ஏற்காட்டில் நடிகர் கார்த்தி குதிரை சவாரி செய்யும் புகைப்படங்கள் வெளியாகிய நிலையில், விடுமுறை தின கொண்டாட்டத்திற்காக ஏற்காட்டில் ஓய்வு எடுக்கிறாரா? அல்லது சர்தார் படத்தின் படப்பிடிப்பு ஏற்காடில் நடந்து வருகிறதா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்டு வந்தனர்.
சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி வந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் ராஷி கண்ணாவும் இணைந்துள்ளார். சென்னையில் தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்பு நிறைவுற்றதும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் மைசூரில் நடைபெற உள்ளது என தகவல்கள் வெளியாகின.
இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர். இதுதவிர பிரபல நடிகை லைலா இப்படம் மூலம் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார்.
இந்நிலையில், இப்படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சர்தார் படத்தின் முக்கியமான காட்சி ஒன்றை அசர்பைஜான் நாட்டில் உள்ள பாராளுமன்றத்தில் படமாக்கி உள்ளார்களாம். அங்கு நடத்தப்பட்ட முதல் சினிமா படப்பிடிப்பு இதுதானாம். இதற்காக படக்குழு ரூ.4 கோடி செலவழித்ததாக கூறப்படுகிறது. சர்தார் படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளது.