இந்த சிக்னலில் தான் இருப்ப.. எந்த உதவினாலும் கேளுங்க.. 80 வயது மூதாட்டிக்கு காலணி அணிவித்த டிராபிக் போலீசுக்கு குவியும் பாராட்டு..!
துரைப்பாக்கத்தில் வெயிலில் வெறுங்காலில் நடந்து சென்ற மூதாட்டிக்கு காலணி அணிவித்த போக்குவரத்து காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை - சோழிங்கநல்லூர் சந்திப்பில் கடந்த 28ம் தேதி பணியில் இருந்த போக்குவரத்து தலைமை காவலர் ஜான்சன் புருஸ்லீ என்பவர் அவ்வழியே கடும் வெயிலில் நடந்து வந்த வயதான மூதாட்டியை பார்த்துள்ளார்.
அப்போது, மூதாட்டி வெயிலின் தாக்கத்தினால் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டிருந்த இடத்தில் சிறிது நேரம் இளைப்பாற அமர்ந்துள்ளார். போக்குவரத்து போலீசார் மூதாட்டியை பார்த்ததும் கையில் இருந்த ₹20 ரூபாயை கொடுத்துள்ளார்.
தொடர்ந்து, பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்த மூதாட்டி வெயில் அதிகமாக உள்ளது. கால் சுடுவதாக கூறியுள்ளார். இதை கேட்ட போக்குவரத்து தலைமை காவலர் சிறிது நேரத்தில் ஒருவரை அனுப்பி காலணி வாங்கி வந்து மூதாட்டிக்கு அணிவித்து அனுப்பி வைத்தார்.
இதையடுத்து, மூதாட்டியோ இரு கைகூப்பி வணங்கி சென்றார். அப்போது, `எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள். இங்குள்ள இரண்டு சிக்னலில் தான் இருப்பேன்’ என மூதாட்டியிடம் அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தியறிந்த தாம்பரம் காவல் ஆணையர் ரவி நேற்று போக்குவரத்து தலைமை காவலரை நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார். அப்போது, அவரது பணி காவல் துறைக்கே பெருமை சேர்க்கும் விதமாக இருப்பதாகவும், தொடர்ந்து இதேபோன்று செயல்படவும் அறிவுறுத்தினார்.