எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்து தந்தை, மகள் பலி..!
வேலூர் சின்ன அல்லாபுரம் பலராமன் முதலியார் தெருவை சேர்ந்த துரைவர்மா டோல்கேட் அருகே போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகள் (மோகன பிரீத்தி), ஒரு மகன் (அவினாஷ்). போளூரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்து பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த மோகன பிரித்தி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு தந்தை வீட்டிற்கு வந்தார்.
துரை வர்மா தனது எலக்ட்ரானிக் பைக் பேட்டரிக்கு இரவு நேரங்களில் சார்ஜ் ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
துரை வர்மாவும் அவரது மகள் மோகன ப்ரீத்தியும் வீட்டில் இருந்த சமயத்தில், இரவு எலக்ட்ரானிக் பைக் பேட்டரி சார்ஜ் ஏறிக்கொண்டிருந்தது.
இதனையடுத்து அவரும் அவரது மகளும் வீட்டில் படுத்து தூங்கினர். தொடர்ந்து சார்ஜ் ஏறிக் கொண்டே இருந்ததால் எலக்ட்ரானிக் பைக் பேட்டரி அதிக அளவில் சூடாகி, இன்று அதிகாலை 2.30 மணிக்கு திடீரென எலக்ட்ரானிக் பைக் பேட்டரி வெடித்து சிதறியது.
மேலும் பைக் முழுவதும் தீ பற்றி, அருகில் இருந்த பெட்ரோல் பைக்கும் பற்றி எரியத் தொடங்கியது. சத்தம் கேட்டு கண்விழித்த துறை வர்மா மற்றும் அவரது மகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேற முயற்சித்தும் முடியவில்லை.
எலக்ட்ரானிக் பைக் வெடித்ததால் வீடு முழுவதும் மின் ஒயர்கள், கட்டில், நாற்காலி போன்ற பொருட்களும் தீப்பிடித்து எரிய தொடங்கின. புகை மூட்டம் எழுந்து, அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
கழிவறைக்குள் கதவை அடைத்தபடி இருவரும் உள்ளே அமர்ந்திருந்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். கழிவறையில் சென்று பார்த்தபோது அங்கு துரை வர்மா அவரது மகள் அமர்ந்த நிலையில் இறந்து கிடந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.