'இனி எல்லா சனிக்கிழமையும் காலேஜ் தான்' - ஸ்டுடென்ட்ஸ்க்கு ஷாக் கொடுத்த அண்ணா பல்கலைக்கழகம் !
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடமாக பள்ளி கல்லூரி படிப்புகள் மிக சிரமத்திற்கு ஆளானது. தற்போது அதன் தாக்கம் குறைந்து வருவதால், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வாய்ப்புகள் நடந்து வருகிறது.
இதனை தொடர்ந்து, 2022-2023ம் ஆண்டுக்கான முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ, எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வு எழுத விரும்புவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். தொலைத்தூரக் கல்வி பயின்றவர் எனில் பிஇ, பி.டெக் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது. டான்செட் தேர்வு வருகிற மே மாதம் 14, 15 உள்ளிட்ட தேதிகளில் நடைபெற உள்ளது.
இத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட தேர்வு மையங்களில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் புது அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. அதில், ‘அண்ணா பல்கலையின் நேரடி இன்ஜினியரிங் கல்லுாரிகளில், செமஸ்டர் தேர்வுகள் முடிந்து, மீண்டும் வகுப்புகள் துவங்கியுள்ளது. இந்த வகுப்புகள், ஜூன் 30 வரை நடத்தப்படும்.
அதுவரை, அனைத்து சனிக்கிழமைகளும் வேலை நாளாகும். மாணவர்கள் வருகைப்பதிவு குறையாமல், வகுப்புகளில் பங்கேற்க வேண்டும். அடுத்த செமஸ்டர் தேர்வு, ஜூலை 6ல் துவங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த செய்தி மாணவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.