உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தாயார் மருத்துவமனையில் அனுமதி..!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள். இவர் சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வருகிறார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசியலில் இருந்து ஒதுங்க ஆரம்பித்ததிலிருந்து, தயாளு அம்மாவிற்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கூட அவரைப் பார்க்க தயாளு அம்மாள் வீல்சேரின் மூலமாகத்தான் அழைத்துவரப்பட்டார். இதனால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார்.
முக்கிய நிகழ்ச்சிகளின் போது , முதல்வரும், மகனுமான மு.க. ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து ஆசி பெறுவது வழக்கம். வயது மூப்பின் காரணமாக அவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் கோபாலபுரம் வீட்டில் இருந்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.வழக்கமான மருத்துவ பரிசோதனை தான். மாலை 6 மணி அல்லது இரவு 7 மணிக்குள் வீடு திரும்பி விடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. மு.க அழகிரி, செல்வி, தமிழரசு மருத்துவமனையில் உள்ளனர்.
தயாளு அம்மாவிற்கு ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு மூச்சுத்திணறல் ஏற்பட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வீடு திரும்பினார். அவருக்கு ஏற்கனவே ஞாபகமறதி நோய் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.