30 ஆண்டுக்கு பின் முதல்முறையாக ஜாமினில் விடுதலையான பேரறிவாளன்: ஆனந்த கண்ணீருடன் வரவேற்ற தாய் அற்புதம்மாள்.!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளன் இன்று ஜாமீனில் வெளியே விடுதலையானார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். தற்போது பரோலில் இருக்கும் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என பேரறிவாளன் கோரியிருந்தார்.
பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எனினும், அவருக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளதால் ஜாமீன் வழங்கப்படுகிறது என்றும், ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாதந்தோறும் பேரறிவாளன் ஆஜராக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி பேரறிவாளன் இன்று ஜாமீனில் விடுதலையானார். பேரறிவாளனின் விடுதலைக்காக நீண்ட சட்ட போராட்டத்தை நடத்தி வரும் அவரது தாய் அற்புதம்மாள், இன்று தனது மகன் ஜாமீனில் வெளியானது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜாமீன் ஒரு இடைக்கால நிவாரணம் என்றும் நீதிக்கான தங்களது போராட்டத்திற்கு துணை நிற்கும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
மேலும் பேரறிவாளனுக்கு ஜாமின் கிடைக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அற்புதம்மாள் கூறினார்.