காங்கிரஸ் விரும்பினால் ஒன்றிணைந்து 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடலாம்: மம்தாவின் புது வியூகமா ?
அண்மையில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜகவும், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மியும் ஆட்சியை கைப்பற்றியது.
குறிப்பாக உத்தர பிரதேசத்தில் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது பாஜக. தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக ஏற்கனவே இருந்த பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்துள்ளது.
இதன்காரணமாக 2024ம் ஆண்டு நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜகவிற்கு எதிராக ஒரு மெகா கூட்டணி அமைத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரே குறிக்கோளோடு செயல்பட வேண்டும் என கோரிக்கையானது முன்வைக்கப்பட்டு பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணி அமைக்க வேண்டும்.
இந்நிலையில், தற்போது, அதே முனைப்போடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காங்கிரஸ் கட்சி விரும்பினால் நாம் ஒன்றிணைந்து 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடலாம்.
கடந்த தேர்தல் முடிவுகளை கண்டு சோர்வடைய வேண்டாம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மோசடி செய்து தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த முடிவுகள் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பது சாத்தியமற்றது’ என குறிப்பிட்டிருக்கிறார்.