2022 - 2023 கல்வி ஆண்டு முதல் இனி M.Phil கிடையாது - பல்கலைகழக மானியக்குழு அறிவிப்பு
முதுநிலை பட்டப் படிப்பு முடித்தவர்கள், எம்பில் பட்டப் படிப்பை முடித்தால் மட்டுமே பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதியாக வைக்கப்பட்டது. இந்த எம்பில் படிப்புகளை 1977ம் ஆண்டு அனைத்து பல்கலைக் கழகங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆசிரியர் பணியில் இருப்போர், முதுநிலைப் பட்டத்துக்கு பிறகு எம்பில் பட்டம்பெற்றிருந்தால், அவர்களுக்கு ஊக்கத்தொகை பெற வசதியாகவும் எம்பில் பட்டம் இருந்தது.
இந்நிலையில், பல்கலைக் கழக மானியக் குழு இந்த முறையை தற்போது மாற்றி, ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்ச தகுதியை கொண்டு வந்துள்ளது. அதனால் எம்பில் பட்டம் தகுதியற்றதாக மாற்றியுள்ளது.
அதாவது, 2022ம் ஆண்டுக்கான பிஎச்டி வழங்குவதற்கான ஒழுங்குமுறைகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அடுத்த கல்வி ஆண்டில் எம்பில் பட்டம் என்பது இருக்காது என்றும், இந்த அறிவிப்பு வரை வழங்கப்பட்ட எம்பில் பட்டங்கள் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக் கழகம் தெரிவித்தபடி, பல மாநிலங்களில் செயல்படும் பல்கலைக் கழகங்கள், குறிப்பாக சென்னைப் பல்கலைக் கழகம் கடந்த ஆண்டே எம்பில் பட்டப் படிப்பை நிறுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பி.துரைசாமி கூறுகையில், ‘பல்கலைக் கழகத்தின் ஒழுங்குமுறைகளை அதற்கான ஆணையத்தின் அனுமதி பெற்றுவிட்டால் 2022-2023ம் ஆண்டு முதல் எம்பில் பட்டத்தின் அங்கீகாரம் ரத்தாகிவிடும். இருப்பினும், தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில பல்கலைக் கழகங்கள் 2021-2022ம் கல்வி ஆண்டுக்கு எம்பில் பட்டப்படிப்புக்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளன’ என்றார்.