ஜூன் 30ல் அமர்நாத் யாத்திரை !
ஜம்மு - காஷ்மீரின் தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத் குகை கோவில்.
ஆண்டு தோறும் கோடைக்காலத்தில் இங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க லச்ச கணக்கில் பக்தர்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தரிசனம் ஜூன் 30ல் துவங்கி, 43 நாட்களுக்கு நடக்கவுள்ளது. அமர்நாத் கோவில் நிர்வாக கூட்டத்தின் தலைவரும், ஜம்மு - காஷ்மீர் கவர்னருமான மனோஜ் சின்ஹா தலைமையில் நேற்று கூட்டம் நடந்தது.
இந்த ஆண்டுக்கான தரிசனத்துக்கு அனுமதி வழங்கவும், கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கடந்த 2019ல் அமர்நாத் யாத்திரை நடந்து கொண்டிருந்த போது, ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் நீக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக, யாத்திரை பாதியில் நிறுத்தப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளும், யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் இந்த வருடம் பக்தர்கள் ஆர்வமாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.