விரைவில் விஜய்யின் இந்த பிளாக்பஸ்டர் பட 2ம் பாகம் குறித்த அறிவிப்பு.. தயாரிப்பு உரிமத்தை கைப்பற்றிய சன் பிக்சர்ஸ் !
நாளைய தீர்ப்பு, பூவே உனக்காக போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் விஜய். கில்லி, சிவகாசி, போக்கிரி, திருப்பாச்சி போன்ற தொடர் வெற்றி படங்களை தந்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தளபதியாக இடம் பிடித்துள்ளார். தனக்கென தனி அடையாளத்தையும், ரசிகர் கூட்டத்தையும் கொண்டுள்ளார்.
கடந்த 10 வருட காலத்திற்குள் கத்தி, துப்பாக்கி, மெர்சல், சர்க்கார், பிகில் போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த வெற்றி படங்களின் 2ம் பாகம் குறித்த பேச்சு அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆவது வழக்கம்.
2012ம் ஆண்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், காஜல் அகர்வால், வித்யுத் ஜமாவால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் துப்பாக்கி.
ஆக்ஷன் த்ரில்லர் படமான இப்படத்தில், ஸ்லீப்பர் செல்களை கண்டுபிடித்து அழிப்பது தான் இந்த படத்தின் கதை. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
துப்பாக்கி படம் ரிலீசாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த முறை கலைப்புலி எஸ்.தாணுவிடம் இருந்து படத்தின் தயாரிப்பு உரிமத்தை சன் பிக்சர்ஸ் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் ஹீரோவாக நடிக்க உள்ள இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க போகிறாரா அல்லது வேறு டைரக்டர் இயக்க போகிறாரா என தெரியவில்லை.
தற்போது, விஜய் தளபதி66 திரைப்படத்தில் பிசியாக உள்ள நிலையில், இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் துப்பாக்கி 2 படம் குறித்த சரியான விவரம் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.