"ஏய் ஜாலிப்பா வரட்டும்.. அவரும் நம்ம நண்பர் தானே" அஜித்துடன் மோதுவது குறித்து விஜய் சொன்ன பதில்
எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல் தொடர்ந்து விஜய் - அஜித் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். இவர்கள் திரைப்படம் குறித்த அறிவிப்பு வந்தாலே, சமூக வலைத்தளங்கள் தொடங்கி திரையரங்குகள் வரை கொண்டாட்டமாக மாறிவிடும்.
தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களான விஜய், அஜித் படங்கள் வெளியாகும் போது, இருதரப்பு ரசிகர்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வார்கள் என்பது தெரிந்ததே.
2023ம் வருடம் பொங்கலுக்கு அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மோத உள்ள நிலையில், இதுகுறித்து விஜய் என்ன சொன்னார் என்று பிரபல நடிகர் ஷாம் கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இந்த இரு படங்களிலுமே, அதிக ரசிகர்களைக் கொண்ட கோலிவுட் டாப் ஹீரோக்கள் நடித்துள்ளதால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகவுள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். மேலும் பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.
அதே போல், அஜித்தை வைத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ள இயக்குனர் எச்.வினோத் 3வது முறையாக இயக்கி அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் ஹார்டிக் வெற்றி பெறும் என அஜித் ரசிகர்கள் இந்த படத்தை வரவேற்க காத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே இந்த இரண்டு படங்களின் மோதல் நிகழ உள்ளதை அறிந்து, நடிகர் அஜித் சூசகமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “உங்களை சுற்றி நெகட்டிவிட்டியோ.. டிராமாவோ.. இல்லாத நபர்களை வைத்துக் கொள்ளுங்கள். ஊக்கப்படுத்த கூடிய இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள். பொறாமைக்கோ.. வெறுப்புக்கோ.. நேரமில்லை. உங்களது சிறப்பான பணியை மட்டும் கைவிடாதீர்கள் என அஜித் கூறியுள்ளார்.
இதன் மூலம் அஜித், எவ்வித பொறாமையும், வெறுப்பும் இன்றி ரசிகர்கள் இரண்டு படங்களுக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து, தற்போது துணிவு - வாரிசு மோதல் குறித்து விஜய் பிரபல நடிகர் ஷாமிடம் போனில் கூறிய தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் ஷாம், போன் மூலம் விஜய்யிடம் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகி விட்டதாக தெரிவித்துள்ளார். அப்போது விஜய் மிகவும் சந்தோஷமாக.. “ஏய் ஜாலிப்பா வரட்டும் பா.. அவரும் நம்ப நண்பர் தானே! அந்த படமும் நல்லா போட்டும் நம்ப படமும் நல்லா போட்டும்” என மிகவும் பாசிட்டிவாக கூறியதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாக, விஜய்யின் இந்த பண்பு அவரின் உயர்ந்த உள்ளத்தை காட்டுவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.